Thursday, October 19, 2017

பொறுமை

♪♪தினம் ஒரு குறள் ♪♪

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப்  படும்.

பொருள்: ஒருவன் நற்குணங்கள் நிறைந்திருக்கும் நிலையிலிருந்து நீங்காதிருத்தலை விரும்புவானாயின் அவன் பொறையுடைமையைப்(பொறுமையை) போற்றிப் பாதுகாத்தல் வேண்டும்.

♦♦பொறுமை என்ற சொல்லுக்கு துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் என்று தான் பொதுவாக அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

♦பொறுமைக்கு இன்னொரு அர்த்தம் காத்திருத்தல்.இந்த உலகில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அத்தனைக்கும் பின்னால் பொறுமையும்,காத்திருப்பும் உள்ளது.
  வாழ்க்கையில் இதை முடிக்கவேண்டும்,அதை முடிக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நிச்சயம் அதற்குரிய காரியங்களைச் செய்துவிட்டுக் கத்திருக்கவேண்டும்.காத்திருப்பு அறிவார்ந்த செயல்பாடு மட்டுமல்ல,தெய்வீகமானதும் கூட.
எதற்கும் உரிய காலம் வரவேண்டும்.அதுவரை காத்திருக்கவேண்டும்.
♦ பொறுமை என்பது பல அர்த்த விரிவுகளைக் கொண்டது. பொறுமை என்பது கஷ்டம் வரும்போது மட்டும் வெளிப்படுத்தப்படுவதல்ல.ரொம்ப சந்தோசமாக இருக்கும்போது,நிறைய அறிவிருக்கும்போது,நிறையப் பணமிருக்கும்போது எனப் பல தளங்களிலும் பல பரிமாணங்களிலும் பொறுமையும் பொறுமையின்மையும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
 
♦பொறுமையில்லாமல் நம் கஷ்டத்தை,சந்தோஷத்தை,நோயை,ஆரோக்கியத்தை,பணத்தை,செல்வாக்கையெல்லாம் நாம் வெளிப்படுத்தத் துடிப்பதாலும் வெளிப்படுத்துவதாலும் வரும் விளைவுகளைப் பற்றி நாம் யோசிப்பதில்லை.
♦கஷ்டத்தில்,நோயில்,வறுமையில் பொறுமையில்லை என்றால் அப்பிரச்சனைகள் அதிகரிக்கும்! செல்வத்தில்,செல்வாக்கில்,அறிவில் - இம்மாதிரியான விஷயங்களில் பொறுமையில்லையென்றால் அவையெல்லாம் நம்மை விட்டு நீங்க ஆரம்பிக்கும்!
♦பொறுமையின் இன்னொரு அர்த்தம் விடாமுயற்சி.இதற்கு உதாரணம் சிறு பூச்சிகள்.இந்தப் பூச்சிகள் ஒரு சுவற்றிலோ தூணிலோ ஏற முயற்சி செய்யும் போது எத்தனை தடவை வழுக்கி விழுந்தாலும் தான் செல்ல வேண்டிய இடத்தை அடையும் வரை தன் முயற்சியைக் கைவிடுவதில்லை.
♦சீன மூங்கிலின் கதை மூலமும் பொறுமையின் வலிமையை அறிந்துகொள்வோம்.
  ♥சீனாவில் இருந்த ஒரு வயதான ஏழை விவசாயி தன் வருங்கால சந்ததியினர்க்கு பயன்தரும் விருப்பத்தில் மூங்கில் விதைகளை வாங்கி நிலத்தில் போட்டு தினமும் நீரூற்றினார்.ஓர் ஆண்டு முடிந்துவிட்டபோதும் ஒன்றும் துளிர்க்கவில்லை.அவரைச் சுற்றி இருந்தவர்கள் கேலி செய்தனர்.ஆனாலும் மனம் தளராது தினமும் நீரூற்றினார்.இவ்வாறு ஐந்து வருடங்கள் கழிந்தன.வழக்கம்போல ஒருநாள் நீரூற்ற செல்லும்போது விதைகள் போடப்பட்டிருந்த இடத்தில் பச்சையாக முளைவிட்டிருந்தன.ஆறே வாரங்களில் 90அடிகளுக்கு ராட்சசத்தனமாக வளர்ந்தன மூங்கில்கள்.உலக அதிசயங்களில் ஒன்று அவை.காத்திருப்பு வீண்போகவில்லை.அதுதான் நமக்கான முக்கியமான பாடம்.எனவே,
♥கனவை விதைப்போம்!
♥அது நனவாவதற்கு நாம் செய்யவேண்டிய காரியங்களை மனம் தளராமல் செய்வோம்!
♥இது நடக்காது என்று சொல்பவர்களையும்,நமக்கே தோன்றும் அச்சங்களையும் சந்தேகங்களையும் புறந்தள்ளுவோம்!
♥அசைக்கமுடியாத நம்பிக்கை வைப்போம்!
♥பொறுமையாகக் காத்திருப்போம்!

♦பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான் என்று புத்தனும்,பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் என்று குரானும் கூறுகிறது. நாமும் பொறுத்திருக்க முயற்சி செய்வோமா!

1 comment:

  1. 👌👌👌👌porumaiyin vilakam arumayana pathipu. Super

    ReplyDelete

நன்றி....