Saturday, November 28, 2020

திரு. லக்ஷ்மண்

நம் நிரந்தரமான மகிழ்ச்சியை உருவாக்கும் காரணிகள் என்ன என்ன?கெடுக்கும் காரணிகள் என்ன? ஆற்றலில் நிறை எது குறை எது?  நிரந்தரமான மகிழ்ச்சியை எப்படி மீட்டுக்கொள்வது.

***

ஆற்றல் குறைபாடு பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அது பெருமாபாலனவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து வரும் அழைப்புகளும் கலந்தாய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. அதன் தொடர்ச்சியே இந்த பதிவு.

புதிதாக படிப்பவர்களுக்கும் ஏற்கனவே படித்தவர்களும் முன் சுருக்கத்தை முதலில் தருகிறேன். பின்னர் புதிய விஷயத்தைத்தருகிறேன். ( கீழே commentல் அதன் முழு பதிவின் சுட்டியைத்தருகிறேன் )

RECAP :

ஒவ்வொரு ஆற்றலிலும் நேர்மறை தன்மை எதிர்மறை தன்மை என்ற இரண்டு உண்டு.

வழிகாட்டுதல் vs குறை சொல்லுதல். 

இரண்டுமே குருவினுடைய ஆற்றல் தான். முதலாவது இருவருக்கும் மகிழ்ச்சியைத்தரும். இரண்டாவது இருவருக்கும் வருத்தத்தை தரும்.

நாம் ஆற்றல் நிறைவாக இருக்கும் பொழுது நேர்மறை தன்மையை எடுத்துக்கொள்கிறோம். நமக்கு ஆற்றல் குறைபாடு ஏற்படும் பொழுது எதிர்மறை தன்மையை எடுத்துக்கொள்கிறோம். 

அதாவது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது வழிகாட்டுகிறீர்கள்
நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாத பொழுது குறைசொல்ல முற்படுகிறீர்கள்

இங்கே மகிழ்ச்சி என்பதை ஆற்றல் நிறையாக எடுத்துக்கொள்கிறோம். நம் புரிதலுக்காக. ( இதவும் மாறும். அது பின்னாளில் கூறுகிறேன் )

இதன் மூலம் நமக்கு ஆற்றல் நிறைவாக இருந்தால் ஒருவரிடம் இருக்கும் நேர்மறைத்தன்மையை நோக்கி பேசுகிறோம். ஆற்றல் குறைபாடு இருந்தால் எதிர்மறைத்தன்மையை நோக்கி பேசுகிறோம்.

இதில் இருந்து 4 நிலைகளை பார்ப்போம்.

1. உங்களிடம் இருந்து துவங்கும் நேர்மறைத்தன்மை எதிரில் இருப்பவரிடம் நேர்மறைத்தன்மையை உருவாக்கினால் , இருவரும் ஆற்றல் நிறைந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அங்கே மகிழ்ச்சி பொங்கும்.  

இருவரும் ஒருவருக்கு ஒருவர் வழிகாட்டுவது.

2.உங்களிடம் இருந்து துவங்கும் நேர்மறைத்தன்மை எதிரில் இருப்பவரிடம் எதிர்மறைதன்மையை தோற்றுவித்தால் நீங்கள் இப்பொழுது ஆற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள். அவரிடம் இப்பொழுது ஆற்றல் குறை உள்ளது.

நீங்கள் வழிகாட்டுகிறீர்கள். ஆனால் அவர் குறை சொல்வதாக பார்க்கிறார். பிரச்சனையில் தொடங்கும்.

3. உங்களிடம் இருந்து துவங்கும் எதிர்மறைதன்மை எதிரில் இருப்பவரிடம் நேர்மறைத்தன்மையை தோற்றுவித்தால் நீங்கள் இப்பொழுது ஆற்றல் குறைந்தவராக  இருக்கிறீர்கள். அவர் இப்பொழுது ஆற்றல் நிறைந்தவராக இருக்கிறார்.

நீங்கள் குறை சொல்கிறீர்கள். ஆனால் அவர் அதை வழிகாட்டுவதாக எடுத்துக்கொள்கிறார்.

4. உங்களிடம் இருந்து துவங்கும் எதிர்மறைதன்மை எதிரில் இருப்பவரிடம் எதிர்மறைத்தன்மையை தோற்றுவித்தால் இருவரும் ஆற்றல் குறைபாடோடு இருக்கிறீர்கள். 

நீங்களுயும் குறை சொல்கிறீர்கள். அவரும் எரிச்சல் அடைந்து எதிர்வினை ஆற்றுவார். பிரச்சனையில் சென்று முடியும்.

இதில் 2வாது நிலையில் நீங்கள் தொடங்கும் பொழுது நல்லவிதமாக தொடங்கி அவர் எதிர்மறையாக பேசி பின்னும் நீங்கள் நிதானமாக இருந்தால் உங்களுக்கு ஆற்றல் மிக மிக அதிகம். நீங்கள் கடவுள் தன்மையில் இருக்கிறீர்கள். ஆனால் அதுவே உடனடியாக நீங்களும் எதிர்மறைக்கு வந்து விட்டால் முன்பு உங்களிடம் இருந்தது பாவனை மட்டுமே. அல்லது குறைந்த ஆற்றல்.

ஆற்றல் எவ்வளவு நிறைகிறதோ அவ்வளவு தூரம் நீங்கள் இறைத்தன்மையில் இருக்கிறீர்கள்.ஆற்றல் எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு தூரம் நீங்கள் சாத்தனின் தன்மையில் இருக்கிறீர்கள்.

இந்த ஒட்டுமொத்த கோட்பாட்டில் நீங்கள் உணரவேண்டியது சுருக்கமாக 'தீதும் நன்றும் பிறர் தரவரா'

இந்த தெளிவு வரும் பொழுது ஒருவர் நம்மை குறை சொன்னாலும் அவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வாய்க்கும். மேலும் அவர் அந்த நிமிடம் ஆற்றல் குறைவாக இருந்தார். அதனால் தவறாக நடந்துகொண்டார். அதை பெரிது படுத்தி நமக்குள் எதிர்மறை நினைவை உருவாக்கிவிடக்கூடாது என்ற உணர்வு இருக்கும். அது நம்மை எப்பொழுதும் ஆற்றல் குறைவில்லாமல் பாதுகாக்கும்.

முக்கிய குறிப்பு : இந்த நிகழ்வில் உங்கள் பக்கம் நியாயம் எதிராளி நியாயம் என்றெல்லாம் பிரித்துப்பார்க்கவேண்டியதில்லை. யாரையும் மன்னிப்பதாகவும் நினைக்ககூடாது. புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

****

உங்களுடைய ஆற்றலில் குறை எது நிறை எது?

1.  தலைமைப்பண்பு மிக்கவரா..

ஆற்றல் நிறை - பொறுப்புணர்வு. எடுத்த காரியத்தை முடிக்கும் தன்மை.

ஆற்றல் குறை - அதிகாரம். Manipulation மூலம் காரியத்தை சாதிப்பது

2. உணர்வுப்பூர்வமான மனிதரா..

ஆற்றல் நிறை - புதிதாக பழகுபவரிடம் தனக்கு பிடித்தைவை இருந்தால் மிக வேகமாக நெருங்குவது.

ஆற்றல் குறை - ஏற்கனவே பழகுபவரிடம் ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் கூட மிக வேகமாக விலக நினைப்பது.

3. தைரியமான மனிதரா..

ஆற்றல் நிறை - பாதுகாப்பு உணர்வு. உயிரை காக்கும் தன்மை. காப்பாற்றுவது

ஆற்றல் குறை - அடிப்பது, பழிவாங்குவது, கொலை செய்யும் வரை தோன்றுவது. 

4. உணவு பிரியரா...

ஆற்றல் நிறை -  புதிய விஷயங்களை கண்டடைவது. புதிய பாதைகளை. Upgrading. தனித்தன்மையை விரும்புவது.

ஆற்றல் குறை - அகங்காரம். தனக்கு மட்டுமே ஒரு விஷயம் தெரியும் என்ற மனநிலை

5. பழமையை வரலாற்றை விரும்புபவரா..

ஆற்றல் நிறை - வழிகாட்டுவது. புகழ்வது.

ஆற்றல் குறை - குறை சொல்வது. குற்ற உணர்வு தருவது.

6. உழைப்பை விரும்புபவரா

ஆற்றல் நிறை - கடின உழைப்பு. தயாள மனம். அனைவருக்கும் உதவுவது.

ஆற்றல் குறை - சந்தேகம். தயக்கம். பயம்

7. அறிவு ஜீவியா

ஆற்றல் நிறை - நினைவு சக்தி. அனைத்தையும் நினைவில் நிறுத்தி அதன் மூலம் உதவுவது. அறிவின் மூலம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது. நல்ல படிப்பு. திறமை.

ஆற்றல் குறை - அறிவுத்திமிர். ஒவ்வொருவரை பற்றியும் எதிர்மறை நினைவுகளை அதிமாக்கிக்கொள்வது.. சுயநலம். பதற்றம். எதிர்காலம் குறித்த பயம்.

8. தீர்வு சொல்பவரா

ஆற்றல் நிறை - பிரச்சனை என்று யார் வந்தாலும்  எப்படியாவாது தீர்வு சொல்வது.

ஆற்றல் குறை - தீர்வை விட்டு விட்டு பிரச்சனையை நோக்குவது.
வாழ்க்கையே பிரச்சனை என்று நினைப்பது. 

9. அழகு விரும்புபவரா

ஆற்றல் நிறை - தானும் தன்னை சுற்றியவை அனைத்தையும் அழகாக பார்ப்பது. அழகாக்குவது.

ஆற்றல் குறை - அழகின்மையை வெறுப்பது. அழகுத்திமிர்.

*******

இந்த பட்டியலை பல நூறு மடங்கு அதிகமாக்க வேண்டும். புரிந்துகொள்ளும் பொருட்டு சுருக்கமாக தந்திருக்கிறேன். ஆனால் பிரிவுகள் இந்த 9க்குள் தான் வரும்.

எல்லாவற்றையும் படியுங்கள். எந்த எந்த நிறை குணம் நேர்மறை குணம் இருக்கிறதோ அதை எதிர்மறையிலும் உங்களுடைய குணம் தென்பட்டால் ... 

இனி எதிர்மறை குணத்தை செய்யத்தோன்றும் பொழுது நிதானித்து அந்த இடத்தை தவிர்த்து உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்து ஆற்றலை ஏற்றிக்கொண்டு மீண்டும் சிந்தியுங்கள். அப்பொழுது நேர்மறை குணமே மிஞ்சும். எதிர்மறை இருக்காது. அந்த நேர்மறையை மற்றவருக்கு தாருங்கள்.

இதை நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்தால் நேர்மறை ஆற்றல் மேலோங்கி எதிர்மறை ஆற்றல் குறையத்துவங்கும். 

****

எது நேர்மறை எது எதிர்மறை என்ற குழப்பம் வந்தால் , அது இன்னொருவரை சந்தோஷப்படுத்துகிறதா அல்லது நல்ல மாற்றத்தை உருவாக்குகிறதோ அது நேர்மறை ஆற்றல். இன்னொருவரை கஷ்டப்படுத்துகிறதா அல்லது சிக்கலை ஏற்படுத்துகிறதோ அது எதிர்மறை ஆற்றல். 

முக்கியக்குறிப்பு - நான் கூறும் எதை செய்யும் பொழுதும் அது உங்கள் அகத்திற்கு நிறைவைத் தர வேண்டுமே தவிர குறையைத்தரக் கூடாது. உங்களை கஷ்டத்தில் ஆழ்த்தி நான் எதையும் எப்பொழுதும் செய்யச்சொல்லமாட்டேன். கொஞ்சம் நிதானிக்க மட்டுமே கூறுவேன். கவனம் தேவை. குழப்பம் இருந்தால் இங்கே கேளுங்கள். அல்லது மடல் ( thiru@timescience.org) அனுப்புங்கள்.  

நன்றி

திரு
#Thiru #thirulakshman

திரு. லக்ஷ்மண்

எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? நம்மிடம் எதிர்மறையாக நடந்து கொள்பவர்களிடம் நேர்மறையாக நடந்துகொள்வது சாத்தியமா ? 

மனதை கடப்பது எப்படி? கடவுள் தன்மை என்றால் என்ன?

*****
வாழ்க்கை பற்றி எனக்கு ஏற்பட்ட பல தரிசனங்களில் மிக மிக முக்கியமானது இது. இந்த தரிசனம் என்னுடைய தனிசொத்து அல்ல. 

இவை என்னுடன் எண்ணத்தாலும் வாக்காலும் செயலாலும் முரண்பட்ட முரண்படும் ஒவ்வொருவரின் பெரும் கருணையினால் நான் கண்டடைந்தவைகள். அதனால் என்னிடம் முரண்பாடுள்ள ஒவ்வொருவருக்கும்  இந்த தரிசனத்தில் பங்குண்டு.

நான் எழுதியிருப்பதை முழுவதும் உங்கள் மனம் உள்வாங்க முடிந்தால் உங்கள் வாழ்க்கையின் பல அடிப்படை பிரச்சனைகளில் இருந்து வலிகளில் இருந்து நிரந்தர விடுதலையை தரும் சாத்தியம் உள்ளது என்று ஆழமாக நம்புகிறேன்.  அதனால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இறுதி வரை படியுங்கள்.

******
எப்பொழுதும் நேர்மறையாக சிந்திப்பது  சாத்தியமா ? 

சமீபத்தில் என்னுடைய ஜோதிடம் மற்றும் மனநலம் சம்மந்தமான ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக , ஒரே செயலுக்கு நேர் மறை எதிர் மறை என்ற இரண்டு தன்மைகள் உள்ளது என்பதை கண்டடைந்தேன்.

வழி காட்டுதல் / குறை கூறுதல்
தலைமைப் பொறுப்பு / அதிகாரம்
தீர்வை நோக்குதல் / பிரச்சனையை நோக்குதல்
விருப்பு / வெறுப்பு

இப்படி இன்னும் ஆழ ஆழ சென்றால் ஒவ்வொரு செயலிலும் நேர் மறை தன்மை எதிர் மறை  தன்மையை என்று இரண்டு உண்டு என்பது புலப்படும்.�� இதில் முக்கியமான விஷயம் , இவை எதிர் தன்மையா இருந்தாலும் ஒன்றுக்கொண்டு நெருக்கமான தொடர்பு கொண்டது. 

வழி காட்டுதல் / குறை கூறுதல் என்பதை எடுத்துக்கொள்வோம்.

நாம் நல்ல மனநிலையில் இருக்கும் பொழுது வழிகாட்டுவோம்.
நம் மனநிலை அவ்வளவு பலமாக இல்லாத பொழுது அதே வழிகாட்டுதலை குறையாக கூறுவோம்.

வழிகாட்டுதல் இருவருக்கும் மகிழ்ச்சியைத்தரும். குறை கூறுதல் இருவருக்கும் மகிழ்ச்சி இன்மையை எதிர்மனநிலையைத்தரும்.

 எடுத்துக்காட்டாக ஒரு நாள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். அப்பொழுது ஒருவரை சந்தித்தால் அவரைபற்றிய மகிழ்வான விஷயத்தை மனம் எடுத்துக்கொள்ளும்.  

அதே வேறொரு நாளில் மிகவும் அயர்ச்சியில் ஆற்றல் குறைபாட்டில் இருந்தால் அதே நபரை சந்தித்ததும் அவரைபற்றிய அயர்வான எதிர்மறையான விஷயத்தை மனம் எடுத்துக்கொள்ளும்.

அதனால் ஒருவரை பற்றி நல்லதும் கெட்டதும் நம் உயிரின் ஆற்றல் மூலமே முடிவு செய்யப்படுகின்றது. அதனால் ஆற்றலை பெருக்கினால் எல்லா நேரத்திலும் நிதானம் இழக்காமல் நேர்மறை சிந்தனையோடே வாழ முடியும். 

இது ஏதோ motivation க்காக பேசுகிறேன் என்று நினைக்கவேண்டும். நான் உண்மையை மட்டுமே பேசுவேன். ( motivation தவறல்ல. ஆனால் நான் அதை செய்யவில்லை)

அந்த ஆற்றலின் பெயர் என்ன? 

அந்த ஆற்றலை தான் இறைபேறாற்றல் என்று கூறுகிறோம்.

நாம் நேர் மறை செயல் செய்யும் பொழுது அந்த ஆற்றல் நமக்கு கூடும். இறை ஆற்றல் அதிகம் ஆகும் பொழுது  நேர்மறை செயல் தொடர்ந்து செய்யத்தூண்டப்படுவோம். அது நமக்கும் பிறருக்கும் ஒன்றுபோல மகிழ்ச்சியைத் தரும்.

அதுவே ஆற்றல் குறைய தொடங்கினால் யார் மீதோ அல்லது எல்லார் மீதும் ஒரு வெறுப்புணர்வு உண்டாக்கும். நாம் சாத்தானாக மாறுவோம்.அது எதிர்மறை செயல் செய்யத்தூண்டும். அது நமக்கும் பிறருக்கும் கஷ்டத்தைத்தரும்.

ஏன் ஆற்றல் குறைந்து சாத்தான் ஆகிறோம்?

எதிர்மறை எண்ணங்களோ செயல்களோ நம் ஆற்றலைக் குறைக்கிறது.
ஆற்றல் குறையும் பொழுது எதிர்மறை எண்ணங்களையோ செயல்களையோ மேலும் மேலும் செய்யத்தூண்டுகிறது. இது ஒரு சுழற்சி. இது தான் சாத்தானின் தன்மை. இந்த சுழற்சியை உடைத்தால் தான் ஆற்றல் பெருகும்.��

எப்படி ஆற்றலை பெருக்கிக்கொள்வது? 

ஞான மார்கத்தில் நம் உடலை சரி செய்வது. நம் சுவாஸத்தை சரி செய்வது. நம் எண்ணங்களை சரி செய்வது. நம் மனதை ஆள்வது.நமக்குள் இருக்கும் கடவுள் தன்மையை அடைவது. இது ஒரு வழி.

இதையே உலகியல் இருப்பவர்களுக்கு கர்மயோகம். அதாவது செயல்.

உங்களை மகிழ்விக்கும் காரியங்களில் ஈடுபடுவது.
பிறரை மகிழ்விக்கும் காரியங்களில் ஈடுபடுவது.
மன்னிப்பது மன்னித்து ஏற்றுக்கொள்வது
ஒருவரின் வலியை போக்குவது. 
மனம் இறங்குவது.
உங்களுக்கு பிடித்தவரைகள் சந்திப்பது. 
எதெல்லாம் உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறதோ அது ஆற்றலை கூட்டும். 

உதாரணத்திற்கு நீங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் பொழுது தானாக பிறரை மன்னிக்க தோன்றும் இல்லையா நமக்கு தீங்கு செய்தவருக்கும் நல்ல செயல் செய்யத்தூண்டும் இல்லையா அது தான் கடவுள் தன்மை.

நான் நல்ல செயலை செய்தாலும் பிறர் எதிர்மறை செயலை செய்கிறார்களே. அது ஏன்?�

நீங்கள் அந்த நொடியில் ஆற்றல் அதிகமாக வைத்திருப்பதால் நல்ல  செயல் செய்கிறீர்கள்.அவர்கள் ஆற்றல் குறைவில் இருக்கிறார்கள் அதனால் எதிர்மறை செயல் செய்கிறார்கள்.�

நீங்கள் நல்லது செய்தும் உங்களை தொந்தரவு செய்ய நினைக்கிறார் என்றால் நீங்கள் யோசிக்க வேண்டியது அவர் ஆற்றல் குறைவில் இருக்கிறார் என்பது மட்டுமே. அவர்கள் உங்களுக்கு காயம் ஏற்படுத்தியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா?

மனைவியை / கணவனை இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.��

இருவரும் நல்ல மனநிலை :��

நீங்கள் நல்ல மனநிலையோடு உங்கள் மனைவியிடம் பேசுகிறீர்கள். அவர்களும் நல்ல மனநிலையோடு உங்களிடம் பேசினால்.அந்த இடம் கடவுள் தன்மை அதிகம் ஆகும். அன்பு அதிகம். இருவரை பற்றி நல்ல நினைவுகள் உருவாகும். அது இன்னும் பல நல்ல நினைவுகளை கொண்டு வந்து சேர்க்கும்.  

இதுவே தான் அம்மா அப்பா குழந்தைகள் உறவுகள் நண்பர்கள் என்று அனைவருக்கும் பொருந்தும்.��

ஒருவர் நல்ல மனநிலை இன்னொருவர் எதிர் மனநிலை : 

நீங்கள் நேர்மறை செயலை செய்தாலும் உடன் இருப்பவர் ( எ.கா உங்கள் மனைவி ) எதிர்மறை செயலை செய்யும் பொழுது நீங்களும் எதிர்மறை செயலை செய்ய தூண்டப்படுவீர்கள். ��அப்படி தூண்டப்படுவதை ஏற்று எதிர்மறை செயலை நீங்கள் செய்யதால் இன்னொருவரை மேலும் எதிர்மறை செயலை செய்ய வைப்பீர்கள். 

இந்த தொடர்ச்சி உங்களுக்குள் இருக்கும் இறை ஆற்றலை மொத்தமாக அழித்துவிடும். இருவரும் சாத்தானின் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இது அன்றோடு முடியாது.

இருவரைப்பற்றிய மிக மோசமான நினைவுகள் இருவருக்குள்ளும் உருவாக்கும். அது அடுத்த கட்ட பிரச்சனைகளுக்கு விதையாக மாறும்.

இங்கே என்ன நடந்தது? 

நீங்கள் முதலில் நேர்மறை செயல் செய்த பொழுது கடவுள் தன்மை இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது எதிர்மறை செயல் வந்ததும் அந்த கடவுள் தன்மை இழந்து சாத்தானின் தன்மைக்கு தள்ளப்பட்டிருக்கிறீர்கள்.இது தான் மனம் போன போக்கில் செல்வது.

உங்களிடம் ஆற்றல் இருந்திருக்கிறது. ஆனால் அதிகம் இல்லை. அதனால் அந்த ஆற்றலை இன்னொருவரின் எதிர் செயல் மொத்தமாக அழித்துவிட்டது. அதனால் அவரை பற்றியோ அவருடைய எதிர்மறை செயல்களை பற்றியோ எந்த அக்கறையும் கொள்வதில் அர்த்தம் எதுவும் இல்லை.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுடைய ஆற்றல் குறைந்த வாக இருந்ததால் சீக்கிரம் தீர்ந்துவிட்டது. அதை பெருக்கிக்கொள்வது  தான் நிரந்த விடுதலை.. 

எதிர்மறை செயல்கள் எவ்வளவு வந்தாலும் நிதானம் இழக்காமல் இருக்க வேண்டுமானால் அபரிவிதமான ஆற்றல் வேண்டும். பிறரை காரணம் காட்டுவது உண்மையான தீர்வு ஆகாது.

 இதை புரிந்துகொண்டால் மீண்டும் அதை செய்ய மாட்டீர்கள். மனதை கடந்துவிட முடியும்.இதை தான் 

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று கணியன் பூங்குன்றனார் கூறினார்.�

என்னை தொந்தரவு செய்பவரிடம் எதிர்மறை செயல் செய்யாமல்  தவிர்ப்பது எப்படி?

நான் மேலே சொன்னது போல் , உங்களை ஒருவர் தொந்தரவு செய்கிறார், உங்களை எதிர்மறை செயலை ஒருவர் செய்யத்தூண்டுகிறார் என்றால் அவரைப்போலவே நீங்களும் ஆற்றல் குறைபாட்டில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உடனடியாக அவரிடம் இருந்து விலகிச்சென்று உங்கள் ஆற்றலை பெருக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ( எப்படி ஆற்றலை பெருக்குவது ? என்று மேலே விடை கூறியிருக்கிறேன் ). 

பிரச்சனை துவங்கும் முன்பே அங்கிருந்து விலகிவிட்டால் அவர்களிடம் உங்களை பற்றிய தவறான எண்ணம் இல்லாமலோ அல்லது குறைவான பாதிப்புடனோ நீங்கள் தப்பித்துவிடலாம். அவரையும் தப்பித்துவிடலாம். இது பல எதிர்கால பிரச்சனைகளில் இருந்து இருவரையும் காத்துவிடும்.

முக்கியமான விஷயம்.. உங்கள் பக்கம் ஆயிரம் நியாயம் இருந்தாலும்  ஒரு எதிர்மறை செயலை நீங்கள் செய்தால் இன்னொருவரை கஷ்டபடுத்தினால் அது உங்கள் ஆற்றல் குறைபாட்டையே காட்டும். அப்பொழுதும் நீங்கள் ஆற்றலை பெருக்கத்தான் வேண்டும். அவர்களை பற்றி விமர்சிக்ககூடாது.

சரி. அந்த சூழலில் இருந்து அவரிடம் இருந்து விலக முடியவில்லை என்றால் என்ன செய்வது?

அவருடைய நல்ல விஷயங்களை பற்றி பேசுங்கள். அவரை புகழுங்கள். அவருடைய எல்லா நல்லவைகளையும் நினைவுபடுத்துங்கள். அவருக்கு எப்படியாவது ஆற்றல் தரப்பாருங்கள். அவர் தன் எதிர்மறை செயல்பாட்டை உடனே நிறுத்திவிடுவார்.

இதை  அந்த உயிரும் உங்களைப்போன்ற உயிர் இந்த நிமிடம் அந்த உயிர் கொஞ்சம் ஆற்றல் குறைபாடோடு உள்ளது என்று நினைத்துச்செய்ய வேண்டுமே ஒழிய அதை வைத்து அந்த உயிரை எடை போடக்கூடாது. நீங்கள் ஏதோ அவரை மன்னிபவராக நினைத்துக்கொள்ளவோ கூடாது. மிகுந்த சமநோக்கோடு அதை செய்யவேண்டும்.

அந்த முழுமையான நேர்மறை செயல் , அவருக்கு ஆற்றலை பெருக்கும். ஆற்றல் பெருகியதும் அவர் இப்பொழுது மகிழ்ச்சியில் திளைப்பார். அவர் உங்களுக்கு ஆற்றல் தருவார். உங்களை மகிழ்விக்க நினைப்பார். புகழ்வார். உங்களை கொண்டாடுவார். எல்லாம் சரியாகும்.  ஒரு துளி காயம் கூட இல்லாமல் நீங்கள் இருவரும் தொடர்ந்து பயணிக்க முடியும்.

இந்த மேஜிக்கை ஒரே ஒரு முறை அனுபவித்துவிட்டால் வாழ்க்கையில் மீண்டும் யாரிடமும் தொடர் வாதம் செய்யவே மாட்டீர்கள். கலந்துரையாட மட்டுமே முடியும். யாரையும் தவறாக நினைக்கத்தோன்றாது. யாரும் உங்களை கஷ்டப்படுத்த முடியாது.இன்னொரு உயிரின் ஆற்றலை அதிகரிக்க உதவும் பொழுது நீங்கள் இயல்பாகவே கடவுள் தன்மையை அடைகிறீர்கள்.

எப்பொழுது நாம் முழுமையான கடவுள் தன்மையை அடைவது?

இன்னொருவர் எதிர் மறையாக என்ன செய்தாலும் அப்பொழுதும் நீங்கள் நிதானம் இழக்காமல் இருந்து நேர்மறை செயலை மட்டுமே மீண்டும் அவருக்கு தந்தால் , நீங்கள் ஆற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கடவுள் தன்மையில் முழுமையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.( ஆற்றலை பெருக்கும் வழிகளை பற்றி இன்னும் விரிவாக விரைவில் எழுதுகிறேன். )

இந்த நிலையை அடைவது தான் ஞானம் அடைவது. இதை அடைவது தான் வீடுபேறின் முதல் நிலை. இது உங்களை நிரந்தரமான மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

உங்கள் மீது எப்பொழுதும் ஒரு நேர்மறை எண்ண அலைகள் பரவியிருக்கும். பிறரையும் உங்களிடம் நெருங்கச் செய்யும். அனைவருக்கும் உங்கள் இருப்பு ஒரு பாதுகாப்புணர்வை ஏற்படுத்தும்.��இது தான் மனதை கடந்து வாழ்வது. இது தான் காலத்தை கடந்து வாழ்வது. 

நாம் அனைவரும் காலத்தை கடந்து வாழ முடியும். ஆம். உண்மையாக கூறுகிறேன் நாம் அனைவருமே கடவுள் தன்மையை முழுவதுமாக அடைய முடியும். நமக்குள் இருக்கும் உயிர் தான் சாட்சி. உயிர் இருக்கும் எந்த ஜீவனும் கடவுள் தன்மையை அடைய முடியும்.

நன்றி
திரு #thiru #thirulakshman


திரு. லக்ஷ்மண்

திரு. லக்ஷ்மண் அவர்களின் முகநூல் பதிவுகள்


கடவுளைநம்பினால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராதா?
***

 நேற்று காலை முதலே கடவுள் உண்மையிலேயே பாதுகாப்பு தரமுடியுமா? கடவுளை நம்பினால் எந்த கஷ்டமும் வராதா? என்பதிலேயே சிந்தனையோட்டம் ஓடிக்கொண்டிருந்தது. அதை சுமந்து கொண்டே பேருந்தில் ஏறினேன்.

வழியில் அழகை பார்த்துக்கொண்டே வந்தாலும் அந்த சிந்தனை வேறு எங்கும் நகரவில்லை. அப்பொழுது திடீரென ஒரு மின்னல் வெட்டியது. 

ஏசு நாதர் போன்ற ஒரு முக்தரையே அடித்து அடித்து சிலுவையில் அறைந்த பொழுது காப்பாற்றாத கடவுள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வரும் சாதாரண பிரச்சனைகளை எல்லாம் தீர்ப்பார் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று.

கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.  இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அதற்கு பிறகு சில மனிநேரங்கள் நிதானம் இல்லை.தடுமாறிக்கொண்டிருந்தேன். இறைதூதருக்கு இது தான் நிலை என்றால் நாம் எம்மாத்திரம்? இங்கே கடவுள் எங்கே? அந்த ஆற்றலுக்கு என்ன தான் அர்த்தம்?

கிருஸ்துவ நண்பர்கள் இது போன்ற கேள்விகளை கண்டிப்பாக எதிர்கொண்டிருந்துப்பார்கள். அதற்கு விடையை பைபிளோ அல்லது அவர்களின் குரு மார்களோ கண்டிப்பாக கொடுத்திருப்பார்கள். எனக்கு அது எதுவும் தெரியாது.  இதுவரை பைபிளும் படித்ததில்லை. மிகச்சில வரிகள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரியும்.

எப்படி இந்த குழப்பத்தில் இருந்து விடுபடுவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது , குழந்தை கருகொள்ள தாமதமாவது குறித்து ஒரு 40 வயது பெண் கலந்தாய்வுக்கு வந்திருந்தார்.  வயதின் காரணமாகவும் குழந்தைப்பிறப்பிற்கான சாதகம் மிகக் குறைவாக இருக்குமே என்று ஏற்கனவே இருந்த மனசஞ்சலம் மேலும் அதிகமானது. யோசனையுடன் ஜாதகம் பார்க்கத்துவங்ினேன்.

நல்ல வேளை இன்னும் ஒரு வருடத்திற்குள்ளாகவே உருவாகிவிடும் சாத்தியம் மிக அதிமாக இருந்தது. சரியான நேரத்திற்கு வந்திருந்தார். ( இதை பற்றி விரிவாக தனியாக எழுதுகிறேன் ). பத்து வருடமாக குழந்தை இல்லாமல் இருப்பவற்கு தீர்வு தர முடிந்ததை நினைத்து மனது சற்றே நிம்மதி அடைந்தது. மறுகனம் மேலும் ஒரு மின்னல் வெட்டியது.

'பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்கள்’என்ற ஏசுபிரான் சிலுவையில் அறையும் பொழுது கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. 

முள்கீரிடம் அணிவித்து சிலுவையை சுமந்து கை கால்கள் எல்லாம் ஆணியில் அறையப்பட்டு ரத்தம் வழிய வழிய தொங்கிக்கொண்டிருந்த ஏசுநாதரிடம் வந்த வார்த்தைகள் ''பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்கள்’ . 

எனக்கு கண்கள் பணித்துவிட்டது. கடவுள் எங்கே இருக்கிறார் என்று முட்டாள்தனமாக தேடியிருக்கிறேன். கடவுள் அந்த வார்த்தைகளை சொல்லியவனுக்குள் தான் இருக்கிறார். அருள் தன்மை இருப்பதாலேயே அத்துனை பெரிய வலியை தாங்க முடிந்திருக்கிறது. வலியெல்லாம் கடந்து அந்த வார்த்தைகளை சொல்ல முடிந்திருக்கிறது. 

***

கடவுளை வேண்டுவது என்பது உங்களை கஷ்டத்தில் இருந்து காப்பதற்கு அல்ல. கஷ்டம் ஏற்படும் பொழுதும் அதை தாங்கும் சக்தியை உண்டு பண்ணுவதற்காக என்ற வெளிச்சம் கிடைத்தது.

கடவுள் தன்மை உங்களுக்குள் எவ்வளவு இருந்தாலும் கடவுள் தன்மை இல்லாதவனுக்கு நீங்கள் சக மனிதன் தான். எதிரியாகவும் நினைப்பான். உங்களுக்கு கஷ்டம் தரவே விரும்புவான். அவனிடம் இருந்தும் உங்களை காத்துக்கொள்ள நீங்கள் செய்யவேண்டியது உங்கள் கடவுள் தன்மையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்பது தான். 

அதை எப்படி அதிகப்படுத்துவது? எதிரிகளுக்கும் நல்லதே நினைக்கும் பொழுது அருள் அதிகமாகும். இந்த செய்தியை நாம் உணரவே ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார்.

இதை பற்றி ஏதாவது பைபிளில் இருக்கும் என்ற நம்பிக்கையில் தேடினேன். இருந்தது.

‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், 
உங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள்; 
உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; 
உங்களைப் பகைக்கிறவர் களுக்கு நன்மை செய்யுங்கள்; 
உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், 
உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்’.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

யார் ஒருவன் எதிரிகளையும ஏற்றுக்கொள்வதற்காக கடவுளின் பெயரை பயன்படுத்துகிறானோ அவன் இறைநிலையை அடைகிறான். எதிரிகளை உருவாக்குவதற்காக யார் ஒருவன் கடவுளின் பெயரை பயன்படுத்துகிறானோ அவன் சாத்தான் ஆகிறான்.

அதனால் தான் அடித்தவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாகினர். அதை அனைத்தும் தாங்கி அவர்களுக்காக ஜபித்தவனின் பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளாய் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

நன்றி

திரு #thirulakshman #Thiru