Wednesday, October 18, 2017

குறள்

♪♪ தினம் ஒரு குறள் ♪♪

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

பொருள்: நமது கோபம் பலிக்காத இடங்களில்,உதாரணமாக நமது முதலாளிகள்,எஜமானர்கள்,நம்மைவிட வலிமையும் செல்வாக்கும் வாய்ந்தவர்களிடத்தில் கோபத்தைக் காட்டுவதால் பயனில்லை.அதனால் நமக்குத் தீமையே ஏற்படும்.சரி,அப்படியானால், நம்மைவிட எளியவரிடத்தில் கோபத்தைக் காட்டலாமா என்றால் அதுவும் கூடாது! ஏன்? அப்போதும் நமக்கேத் தீமை என்கிறார்.
♦நம்மை விட எளியவர் மீது கோபப்படும்போது இம்மையில் பழியும், மறுமையில் பாவமும் வந்து சேரும் என்பது ஒருபுறம் இருந்தாலும்,கோபம் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது நம் உடம்புதான்.இதயத்துடிப்பு அதிகமாகி,இரத்த அழுத்தம் அதிகமாகி, வியர்த்து,கண்கள் சிவந்து,நாம் செய்யும் எதிர்வினைகளால் முதலில் பாதிக்கப்படுவது நம் இதயமும், மூளையும் தான்.
♦ ஆனால்,சில இடங்களில்,குழந்தைகளை நெறிப்படுத்த,அநியாயத்தை எதிர்த்து, மற்றவர்களைச் சரிப்படுத்த கோபத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை.இப்படிப்பட்ட கோபம் ஒரு தர்மம் கூட.நமது கடமைகளில் ஒன்று. இதைத் தான் பாரதி 'ரௌத்திரம் பழகு' என்றான்.இந்த மாதிரியான கோபம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.அப்படி வெளிப்படுத்தும்பொழுது நாம் நம்மை அந்த உணர்ச்சியின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு உண்மைகளை மட்டும் ஆணித்தரமாகச் சொல்வோம்,பேசுவோம்.வார்த்தையிலும் நடத்தையிலும் நிதானம் தவறாது.
♦கோபத்தை நெருப்பைப் போல் அல்லாமல் சுடும் வெயிலைப் போல பயன்படுத்தவேண்டுமாம்.முயற்சிசெய்து பார்ப்போமா!

1 comment:

  1. நன்றி. உங்களால் தினம் ஒரு குறள் விளக்கம் அறிவதற்கு.

    ReplyDelete

நன்றி....