ஆற்றலை சேமிப்பது எப்படி - 2 - உண்மையை நோக்கி பார்வையை விரிவு செய்யுங்கள்
*****
எந்த பிரச்சனையிலும் யார் சரி யார் தவறு என்று பார்த்து முடிவுக்கு வருவது நிறுத்துங்கள். எல்லோரும் சரி என்ற பார்வையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுவே உண்மையை நோக்கிய பார்வை. அந்த உண்மையே உங்களுக்கு ஞானத்தை வழங்கும்
******
உதாரணமாக
நீங்கள் மெதுவாக அல்லது சரியான வேகத்தில் வண்டி ஓட்டுபவர். இன்னொருவர் வேகமாக வந்து உங்கள் வண்டியில் மோதிவிட்டார்
நீங்கள் சரி. அவர் தவறு என்று முடிவுக்கு வருவதும் வேகமாக வண்டி ஓட்டியவரை திட்டிவிட்டு செல்ல தண்டனை பெற்றுத்தர எல்லா வாய்ப்பும் உள்ளது. அந்த நிகழ்வுக்கப்புறம் வேகமாக வண்டி ஓட்டுபவரைக்கண்டாலே பிடிக்காது. இவர்களால் தான் இந்த உலகத்தில் எல்லா பிரச்சனையும் வருகிறது போன்ற வெறுப்புணர்வு அதிகமாக வாய்ப்புள்ளது.
நீதிமன்றதுக்கு சாட்சி போதும். . உண்மை தேவையே இல்லை. நமக்கு நம்வாழ்வில் நிம்மதி அடைய ஆற்றலை வளர்க்க அனைத்திற்கும் தேவையானது உண்மையே ஒழிய சரிதவறு அல்ல.
நீதிமன்றத்தின் விசாரனை யார் சரி யார் தவறு என்பதை நோக்கியே இருக்கும். ஆனால் நம் விசாரனை இருவரும் சரி என்ற இடத்தில் இருந்தே இருக்க வேண்டும். அதனால் தான் ஏன் என்று கேட்கிறோம்.
விபத்து ஏன் நடந்தது?
அவர் வேகமாக வந்தார். ( நீதிமன்றத்திற்கு இது போதும்.. நமக்கு இது போதாது)
அவர் ஏன் வேகமாக வந்தார்?
அவருக்கு வேகமாக வண்டி ஓட்டப்பிடிக்கும்
அவருக்கு ஏன் வேகமாக வண்டி ஓட்டப்பிடிக்கிறது?
அவருக்கு 3ம் பாவத்தில் செவ்வாய்த்தொடர்பு இருக்கும். அதனால் வண்டி வேகமாக ஓட்டப்பிடிக்கிறது.
அவர் ஏன் அந்த அமைப்போடு பிறந்தார்?
அவர் பிறந்த நேரத்தில் அப்படி ஒரு அமைப்பு உள்ளது.
அவர் ஏன் அந்த நேரத்தில் பிறந்தார்?
எதார்த்தமாக நடந்தது. அவரோ அவரது பிறந்த நேரமோ அவர் தீர்மாணிக்கவில்லை. பெற்றோருக்கும் இதை பற்றி பெரிய தெளிவு இல்லை.
இனி அந்த நேரத்தில் பிறப்பை மொத்தமாக தடுத்துவிடமுடியுமா?
வேகமாக வண்டி ஓட்டுபவர் இயல்பாக தைரியம் அதிகம் இருக்கும்.
தைரியம் இருப்பவர்களே இல்லாத சமூகத்தை உருவாக்க முடியாதே.
மேலும் வேகத்தால் உங்களை தொந்தரவு செய்த ஒருவர் இன்னொருவருக்கு பாதுகாப்பாகவும் இருந்திருக்க முடியும்.
பிரச்சனை வேகத்தில் இல்லை. அதை நடுரோட்டில் செய்யும் பொழுது அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
அவருக்கு வேகம் பிடிக்கும் என்றால் ஆம்புலன்ஸில் வேலை செய்தால் அங்கு அது உயிர்காக்கும் சேவையாக மாறும்.
Race ல் கலந்து கொண்டால் அது பெரிய விளையாட்டு வீரராக மாறமுடியும். Race ல் ஓட்டுபவர்கள் ரோட்டில் வேகமாக ஓட்டமாட்டார்கள்.
மேலும் ஒருவர்ரோட்டில் வேகமாக செல்வதற்கு வேகம் மட்டும் காரணமாக இருக்க முடியாது..
அவர் இளைஞராக இருந்தால் தன் ஆண்மையை நிரூபிக்க நினைத்தும் அதை செய்யலாம். அல்லது அவரது தோல்வியை கோபத்தை வெளிப்படுத்த நிதானம் இழந்து அப்படி செய்திருக்கலாம். இன்னும் பல காரணிகள்.
இவை அனைத்திற்குமே தீர்வு உள்ளது. இவை அனைத்தையும் ஆழமாக செல்லும் பொழுது மீண்டும் அவர் ரோட்டில் வேகமாக செல்வதை மொத்தமாக தவிர்க்க முடியும். இதை எல்லாம் அவருக்குள் ஏதோ ஒன்று தான் இதை செய்யத்தூண்டியது. காரணம் உள்ளது. மற்றபடி அவர் சரி என்று சிந்திக்க ஆரம்பித்தாலே விடைகிடைக்கும்..
ஒவ்வொரு காரியத்திற்கு பின்னும் இத்தனை காரணங்களை யோசிக்க முடியாதவர்கள் என்ன செய்வது?
எல்லோரும் நல்லவர்கள். அவர் செய்த செயல் நம்மை தொந்தரவு செய்துவிட்டது. மற்றபடி அவர் நல்லவராக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று ஆழமாக நம்புவது. தெரிந்தவராக இருந்தால் அவர் செய்த நல்லவைகளை எல்லாம் சிந்தித்து அவரை மீண்டும் ஏற்றுக்கொள்வது.
இல்லை அவர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தால் அவரை விட்டு விலகிவிடுவது. விலகும் பொழுதும் அவர் நல்லவர்தான். அவர் மீது எந்த தவறும் இல்லை என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது மட்டுமே நிரந்தரமான நிம்மதியை உங்களுக்கு சாத்தியப்படுத்தும்.
*****
ஏற்கனவே பல முறை கூறியது போல் உங்களிடம் தவறாக நடப்பவர்களிடம் சரியை மட்டுமே பாருங்கள். அவரை சரிசெய்ய பார்க்காதீர்கள். அது உங்களின் ஞானம் நோக்கிய பாதையில் நிம்மதி நோக்கிய பாதையில் ஆற்றலை சேர்க்க விரும்பும் பாதையில் தடையாகவே மாறும். சரி செய்ய முடியவில்லையா விலகிவிடுங்கள். ஆனால் தவறாக நினைக்கக்கூடாது.
உயிர் உள்ள எல்லோருக்குள்ளும் உண்மை இருக்கும். அதை தான் பார்க்கச்சொல்கிறேன். வெளியே ஒருவர் எப்படி நடந்துகொண்டாலும் எல்லாருக்குள்ளும் உண்மை தான் உயிராக விளங்குகிறது. உண்மையை பார்க்கத்துவங்கிவிட்டால் எல்லாரையும்பிடிக்கும். உங்கள் உயிரும் வளரும்.
சரி தவறு எல்லாம் சமூகம் சார்ந்தது.மனம் சார்ந்தது. அதற்கும் ஆன்மாவிற்கு ஞானத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
அழகை கடந்தால் தான் ஞானம் என்றால் கோபத்தைக்கடந்தால் தான் ஞானம் என்றால் அறிவை கடந்தால் ஞானம் என்றால் ஒழுங்கையும் கடந்தால் தானே ஞானம். ஒழுங்கை மட்டும் புனிதபடுத்துவது ஏன்?
எல்லோரும் சரி என்ற பார்வையை வளர்த்துக்கொள்ளாமல் எத்தனை தியானம் செய்தால் பலன் இருக்காது. அது ஓட்டைப்பாத்திரத்தில் நீரை பிடிப்பது போல் தான். தியானம் செய்யும் வரை இருக்கும் நிம்மதி அது முடிந்த பிறகு இருக்காது.
தியானத்தை குறைத்து மதிப்பிடவில்லை. அது எதற்காக செய்கிறோம் என்ற உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். ஞானம் அடைய தியானம் செய்கிறீர்கள் என்றால் அங்கே உண்மை தான் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலும் எல்லாரும் சரி என்ற பார்வை வளரும் பொழுது உங்களை சுற்றி உள்ளவர்களின் சரியை பார்ப்பீர்கள். குறைபார்க்க மாட்டீர்கள். தவறான நினைவுகள் எல்லாம் விலகும். உங்களுக்கும் முழுமையான நிம்மதியை பார்ப்பீர்கள். ஆற்றல் உள்ளும் புறமும் நிறையும்.
No comments:
Post a Comment
நன்றி....